அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்துப் பேசியதாவது:
அக். 5 டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இறை வணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றும் சுகாதார உறுதிமொழி எடுத்திடவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கொசுப்புழு தடுப்புப் பணியாளர்கள், மேற்கொள்ளும் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிலவேம்பு கசாயம், உப்புக்கரைசல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளுக்கு சாப்பாட்டு கஞ்சி சேர்த்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென்று சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கரைசல் தெளிக்கப்பட வேண்டும்.
மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. லோகேஷ்வரி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ப. ரெங்கராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமந்த்சந்த்காந்தி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன், டினாகுமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, அரியலூர் வட்டாட்சியர் சு. முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.