அரியலூர் மாவட்டம் விழுப்பனங்குறிச்சியிலுள்ள இருளர் காலனித் தெருவுக்கு தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி, திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் வடபுறம் இருளர் இனமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது தெருவுக்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமோ,ஊராட்சி நிர்வாகமோ சாலை அமைத்து தரவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக மேற்கண்ட தெருவுக்கு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயலெட்சுமி, வளர்மதி, கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் உலகநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியச் செயலர் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பரிசுத்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.