அரியலூர் மா வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளை கணினியில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி பேசியது:
மாவட்டத்தில் கணக்கெடுப்பாளர், ஆசிரியர்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பதிவேடுகளில் உள்ள ஆதார், தொலைபேசி எண்கள், குடும்ப அட்டை எண்கள் ஆகிய விவரங்களை கணினியில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கணினியில் பதிவு செய்ய தமிழ்நாடு இ-சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பணியை மேற்பார்வை செய்ய அலுவலகங்களில் உள்ள கணினி தெரிந்த வருவாய் ஆய்வாளர்கள் 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் 5 கணினி பதிவாளர்களை மேற்பார்வை செய்து, பணிகள் செம்மையாக நடைபெறுவதை கண்காணிகப்பட வேண்டும். பதிவேடுகளை கணினியில் பதிவு செய்த பின்னர் மேற்பார்வையாளரும், கணினி பதிவாளரும் கையெழுத்திட வேண்டும். வட்டாட்சியர் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பதிவேடுகளை முறையாக வழங்கி பதிவு செய்த பின்னர் திரும்ப பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒருங்கிணைந்து பதிவேடுகளை பதிவு செய்வதற்கான இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். பணிகள் முடிந்தவுடன் பொறுப்பு அலுவலர்கள் அனைத்தும் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சான்று வழங்க வேண்டும். இந்த பதிவு செய்யும் பணிகள் 90 நாள்களில் முடிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் அலுவலக உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவன பிரதிநிதிகள் நடத்தினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக உதவி இயக்குநர் சித்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பரிதாபானு, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சந்திரசேகரன், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.