சர்வதேச உடலுறுப்புகள் தான தினத்தை முன்னிட்டு ஜயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தாளாளர் த.முத்துகுமரன் தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி முதல்வர் சித்ரா, லியோ சங்கச் செயலர் பிரின்ஸி டயானா, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தாளாளர் த. முத்துக்குமரன் தலைமை தாங்கி பேசியது:
இன்றைய காலத்தில் உடல் உறுப்புகள் பல்வேறு காரணத்தினால் செயலற்று உள்ளது. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் மாற்றங்கள், ரசாயனம் கலந்த நச்சு உணவுகள், புகை மற்றும் மதுவிற்கு அடிமையாகுதல் போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள், இதயம் போன்ற பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழக்கப்படுகின்றது. இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க உறவினர்கள், பொதுமக்கள் முன் வரவேண்டும். மேலும் கண்களை தானமாக அளிப்பதால் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். பொதுமக்கள் கண் தானம் உடல் தானம் அளிப்பதற்கு முன்பதிவு செய்ய முன்வர வேண்டும். ஏற்பாடுகளை நர்சிங் கல்லூரி ஆசிரியர் சிவரஞ்சனி மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர். முன்னதாக லியோ சங்கத்தலைவர் ராதிகா வரவேற்றார். முடிவில் மலர்விழி நன்றி கூறினார்.