இலவசங்களையும், சினிமாகாரர்களையும் நம்பி வாக்களிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் கூறியது:
காந்தி, நேரு உள்ளிட்ட தேச தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடி போற்றப்பட வேண்டியவர். அவர் தங்கள் நாட்டிற்கும் வர வேண்டுமென ஏங்காத நாடுகள் கிடையாது. இலவசங்களையும், சினிமாகாரர்களையும் நம்பி வாக்களிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். சற்று அவர்களின் பின் புலங்களை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு பார்வையிட்டு முறையான ஆய்வறிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், அதிகபட்ச நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கும் என நம்புகிறேன். அதற்குத் தேவையான ஆதாரங்கள், விளக்கங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் தற்போது கருத்து வேறுபாடு நிலவுகிறது. திமுகவை நம்பி இருந்தவர்களை அவர்கள் ஏமாற்றக் கூடாது என்றார் அவர்.