அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தங்கள்பணிகளைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகம் முன்பு இதர கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போட்டித் தேர்வு எழுதுவதற்காக 2 நாள் விடுப்பு கேட்பதற்காக அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கடந்த 7 ஆம் தேதி சென்ற சேனாபதி கிராம நிர்வாக அலுவலர் ராயர், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் குருமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் கேட்ட போது பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து ராயரின் நண்பர்களான கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய இருவரும் தாக்கியதில் வருவாய் ஆய்வாளர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பிரச்னை தொடர்பாக ராயர் உள்பட 3 கிராம நிர்வாக அலுவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உரிய விசாரணை இல்லாமல் கோட்டாட்சியர் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட வந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் பொய்யாமொழி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 89 பேர் பங்கேற்றனர்.