திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும் என்று கருத்தரங்கில் பேராசிரியர்கள் பேசியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் திருக்குறள் நெறி வாழ்வோம் என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன்,கல்லூரிப் பேராசிரியைகள் மகாலட்சுமி, நீலகல்பனா, அருள்மொழிச்செல்வி, கனிமொழி, பேராசிரியர்கள் பாஸ்கர், கார்த்திகேயன் பேசினர். இக்கருத்தரங்கில் அவர்கள் பேசியது:
அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளாய் பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் திருக்குறள் விளக்குகிறது. மனிதன் அன்போடும், பண்போடும் ,அறத்தோடும் வாழ்ந்து, முழுமையான நல்வாழ்வை அடைய, அத்தகைய நிலைக்கு மனிதக்குலத்தை அழைத்துச் செல்ல வள்ளுவர் காட்டும் வாழ்க்கை
முறைக்கு ஆற்றல் உண்டு.
எனவே தமிழ் மக்கள் திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் நிச்சயமாக மகிழ்வான வாழ்வு கிட்டும் என்றனர்.
கல்வியியல் கல்லூரி ஆலோசகர் க.வரதராஜன் முன்னிலை வகித்தார். நிறைவில் பேராசிரியர் அன்பழகன் நன்றி கூறினார். கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர் வேல்முருகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.