அரிலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் எம்எல்ஏ வீட்டு முன் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயன்றார்.
ஜயங்கொண்டம் வேலாயுதநகர் 7-வது தெருவில் வசிப்பவர் அண்ணாமலை (60), ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர் தா.பழூர் சாலையில் மேல்புறத்தில் தனது மனைவி மல்லிகாவின் பெயரில் கடந்த 30 ஆண்டுக்கு முன் இடம் வாங்கி வீடுகட்டி வசித்து வந்தார்.
தற்போது வேலாயுதநகர் 7-வது தெருவில் தனது மகன்கள் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இந்நிலையில் தனது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அண்ணாமலையின் பழைய வீட்டுக்கு எதிரே வசித்து வந்த தற்போதைய அதிமுக எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தனக்குச் சொந்தமான வீட்டையும், காலிமனையையும் பக்கத்து வீட்டில் வசித்துவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பனிடம் இடத்துக்கு இடம் பரிவர்த்தனை செய்துகொண்டதாகத் தெரிகின்றது. இது தான் 30 ஆண்டாக
அனுபவித்து வரும் காலிமனை எனக்கூறி இடப் பிரச்னை குறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று அந்த பிரச்னைக்குரிய இடத்தில் கம்பி வேலி அமைக்க முன்னாள் எம்எல்ஏ ஏற்பாடு செய்த ஆள்கள் வந்தனர்.
தகவலறிந்த அண்ணாமலை தனது மனுவுக்கு இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் கம்பி வேலி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும் எம்.எல்.ஏ.க்கள் வீட்டுக்கு முன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிகொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அருகிலிருந்தோர் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனையும் தீப்பெட்டியையும் பறித்துச் சென்றனர். மேலும் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் போராட்டம் தொடரும் என அவரும் அவரது குடும்பத்தினரும் கூறிச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து எம்எல்ஏ ராமஜெயலிங்கத்திடம் கேட்டபோது பாதையில் ஆக்கிரமிப்பு இல்லை எனவும், அண்ணாமலை வாங்கிய இடத்துக்குப் பாதை இல்லை. அவர் பாதை இல்லாமல் இடம் வாங்கியுள்ளார். எங்கள் இடத்தைத்தான் பாதையாக நாங்கள் கொடுத்திருந்தோம் என்றார்.