கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியதை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3 ஆம் நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நிகழாண்டு ஈஸ்டர் தினம் ஏப். 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அதன்படி தவக்காலம் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அருட் தந்தையர்கள், கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசினர்.
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குதந்தை சுவைக்கின் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் அந்தோணி சாலமோன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றதில், கலந்து கொண்ட அரியலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.
இதேபோல் ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் மேற்கொள்வர்.