அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 78 பேருக்கு ரூ.6 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் தலைமை வகித்து,இலவச வீட்டுமனைப் பட்டா, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக வளர்ச்சித் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டுறவு சங்கத் தலைவர் தங்க.பிச்சமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்கள் வேல்முருகன், தாரகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.