ஜயங்கொண்டம் அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன.
இவற்றில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலுள்ள நீர்தேக்க தொட்டியின் மின்மோட்டார் பழுதானதால் வேறு பகுதி குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டது.
இதனால் கிராமத்தில் உள்ள மேலத் தெரு நடுத்தெரு, வடக்குத் தெரு மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சனிக்கிழமை போதுமான குடிநீர் விநியோகிக்கப்படாததால் கோபமடைந்த மக்கள் கும்பகோணம் - ஜயங்கொண்டம் சாலையில் கழுவந்தோண்டி பேருந்து நிறுத்தம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ்காந்தி, செல்வம், ஊராட்சி எழுத்தர் அழகேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும், மின் மோட்டார் விரைந்து சரிசெய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனால்பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.