ஜயங்கொண்டத்தில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (60). இவர், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றவர். இவருக்கு, வசந்தா என்ற மனைவி, சாமிநாதன், ரஞ்சனி, ரமணி ஆகிய மகன், மகள்கள் உள்ளனர். அன்பழகன் கடந்த சில வருடங்களாக ஜயங்கொண்டம் வேலாயுத நகர் 9ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் தனியே வசித்து வந்தார். அவருடன் சேடக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் (45) என்ற பெண்மணி வீட்டுவேலைகளைச் செய்துகொண்டு அவருக்குத் துணையாக இருந்து வந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அன்பழகன் தங்கியிருந்த வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, மனைவி வசந்தாவுக்கு தகவல் தெரியவே அவர் ஜயங்கொண்டம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அன்பழகனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.