அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள தா.பழூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் தங்கராசு (55). கட்டடத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் மயானக் கொட்டகை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிமென்ட் பூச்சு பணியின்போது, தங்கராசு நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மேற்கூரையை ஒட்டிச்சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சிந்தாமணி காலனி தெருவைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், மயான கொட்டகையை வேறு இடத்தில் கட்ட வேண்டும் எனக்கோரி தா. பழூர் - ஜயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பழூர் போலீஸார், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தா.பழூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஜயங்கொண்டம் - குடந்தை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.