அரியலூர் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடும் வெள்ளாறில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் செம்பேரி வெள்ளாறு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரனை கடந்த வாரம் சந்தித்த இதுதொடர்பாக மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, செந்துறை வட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் வெள்ளாற்றை கடந்த 11 ஆம் தேதி ஆய்வு செய்தனர். இதையறிந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த முள்ளுக்குறிச்சி சுரேஷ், ரமேஷ் ஆகியோர் செம்பேரி வெள்ளாறு பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் டேவிட்(எ) கிருஷ்ணசாமியை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக செம்பேரி வெள்ளாறு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.