அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் துளார் அருகே மருங்கூர் கிராமத்தில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து மனை பிரிவுகளாக மாற்ற முயற்சிக்கும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம், மருங்கூர் வடக்கு தெரு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு: எங்கள் கிராம ஏரியை சுற்றியுள்ள புளியமரங்களை தனிநபர்கள் சிலர் அகற்றினர். இதையறிந்த நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தினோம். ஆனால் அவர்கள் மீண்டும் அந்த புளியமரங்களை அகற்றி ஏரி மற்றும் நீர்வழிப் பாதைகள் மீது செம்மண் கிராவல்களைக் கொட்டி மனைப் பிரிவுகளாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். இந்த ஏரியைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஏரியை ஆக்கிரமித்து மனைப் பிரிவுகளாக மாற்றினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.