அரியலூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் அரியலூரில் அனைத்து அரசு அலுவலகங்களும் இருப்பதால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமான எம்.பி. கோயில் தெரு, சத்திரம் உள்ளிட்ட பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
அரியலூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாகவே உள்ளது.
குறிப்பாக வாரச்சந்தை நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் திணறுகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து அரியலூர் தனி மாவட்டமாகி 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. குறிப்பாக சத்திரம், எம்.பி.கோயில் தெரு சாலையில் உள்ள இரு பெரிய ஜவுளி கடைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஒதுக்காமல் இயங்கி வருவதால், கடைக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திச் செல்கின்றனர்.
இதனால் இவ்வழியே செல்லும் பேருந்துகள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை. போக்குவரத்து போலீஸாரின் கட்டுப்பாடுகளும், இங்கு எடுபடுவதில்லை. எனவே, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.