இந்தியாவில் ஆளுநர் பதவியே தேவையில்லாதது என்றார் திரைப்பட இயக்குநர் கௌதமன்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதியில் பல்வேறு நிகழச்சிகளில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 28 நாள்கள் ஆகியும் காலம் தாழ்த்துவது நீதிக்குப் புறம்பானது.
தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதும், ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதும் வேதனை அளிக்கிறது.
நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க முயற்சி செய்தது கண்டனத்துக்குரியது. ஆளுநர் தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடித்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் தூதுவராக உள்ள ஆளுநர், தமிழகத்தில் பிரச்னையை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களை பார்க்கும் போது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆளுநர் பதவி என்பது தேவையில்லை.
ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கு தேவையானவர்களை நிறுத்தி கலகத்தை ஏற்படுத்துவது தற்போது நடைபெற்று வருகிறது.
வைரமுத்து பிரச்னையில், பெண்ணாகப் பிறந்த யாருக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம். தவறு யார் செய்தாலும் ஆவணங்களை நிரூபிக்கும் பட்சத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிர்மலாதேவி மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் . அவருக்குப் பின்னால் எவ்வளவு பெரிய அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார் அவர்.