மது போதையில் ஏற்பட்ட தகராறில் 6 மாதக் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). அனுராதா (24). தம்பதிக்கு ஜெயசுதா, 6 மாதக் குழந்தை ஜெகதீஷா என 2 குழந்தைகள். கடந்த 9 ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டனுக்கும் அனுராதாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், அனுராதாவைத் தாக்கியுள்ளார். அனுராதா கோபித்துக்கொண்டு, தனது 6 மாத குழந்தை ஜெகதீஷாவை வீட்டில் விட்டுவிட்டு, ஜெயசுதாவைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து அனுராதா வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, 6 மாத குழந்தை ஜெகதீஷா உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடும்பத்தினர் சேர்ந்து குழந்தையின் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மணிகண்டன் வீட்டுக்கு வந்த மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் குழந்தை இறந்த விவரம் தெரியவந்தது. செவிலியர்கள் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரனிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்கு பதிந்து, குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.