கோடை வெயிலை சமாளிக்க, கரூர் நகர்ப் பகுதி மற்றும் நொய்யல் பகுதியில் தர்ப்பூசணி பழம் விற்பனைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்துவிட்டதால், கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எப்போதும் வேலூர் மாவட்டம்தான் வெப்ப அளவில் முதலிடம் பிடித்திருக்கும். ஆனால் நிகழாண்டில் வேலூரை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை கரூர் பரமத்தி பகுதி நிரப்பியுள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வடமாநில குளிர்பானங்களை நாடாமல் இயற்கை கொடுத்திருக்கும் இளநீர், நுங்கு, பதனீர், தர்ப்பூசணி போன்றவற்றை வாங்கி உண்டு வருகின்றனர்.
மேலும் வெயில் காலத்தில் வெளியேறும் வியர்வையின் அளவை சமப்படுத்தும் வகையில் நீர்சத்துள்ள பழவகைகளை உண்ணுமாறு மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளதால் தற்போது தர்ப்பூசணி பழம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தர்ப்பூசணி வியாபாரி கூறுகையில், முன்பெல்லாம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்துதான் அதிகளவில் தர்ப்பூசணி வரும்.
இப்போது திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தர்ப்பூசணி கரூர் நகர் பகுதி மற்றும் நொய்யல் பகுதிக்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் நீர்சத்து 90 சதவீதமும், நார்சத்து 10 சதவீதமும் உள்ளதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து நார் சத்தையும் கொடுக்கிறது. எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத சத்தான உணவாக இருப்பதால் இந்த பழம் அதிகளவில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது என்றார்.