கரூர் நிதிநிறுவனங்களில் 2 ஆவது நாளாக வருமானவரி சோதனை
கரூரில் நிதி நிறுவனங்களில் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதித் தொழில், கொசுவலை மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்டும் தொழில் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருவதால், இத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதிநிறுவனங்கள் கடனுதவி செய்து வருகின்றன. இங்கு, கோவை சாலையில் உள்ள பிரபல நிதிநிறுவனத்தில் கோவை வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
20 பேர் கொண்ட குழுக்களாக வந்த அவர்கள், கோவை சாலையில் உள்ள 3 நிதிநிறுவனங்கள் மற்றும் மகாத்மா காந்தி சாலையில் உள்ள பிரபல நிதிநிறுவனம் என நான்கு நிதிநிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதே நான்கு நிதிநிறுவனங்களில் சோதனை நடந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.