கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா முன்னிலை வகித்தார். பேரணி, திண்ணப்பா கார்னர், பேருந்து நிலையம், ஜவஹர்பஜார் வழியாகச் சென்று சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.
ஊரகப் பகுதிகளில் திறந்தவெளி மலம்கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து, கழிப்பறையைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பேசுகையில், வரும் நவ. 31-ம் தேதி கரூர் மாவட்டம் திறந்தவெளி கழிப்பது இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் என்ற இயக்கம் கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கழிப்பறை இல்லாதவர்களிடம் கழிப்பறை கட்ட அரசு மானியம் வழங்குவதை எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார், வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.