கரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரி குடிநீர் ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக அப்பகுதியினருக்கு போதிய அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை காலை மாயனூர் ரயில்வே கேட் முன் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மாயனூர் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.