கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
கரூர் சின்னாண்டாங்கோயில் ராஜா நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் ராம்குமார் (20). க.பரமத்தி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.
கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் சந்தானம் மகன் முரளிதரன் (21). இவர், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்து வந்தார்.
ராம்குமார், முரளிதரன் இருவரும் பள்ளிப்பருவ நண்பர்கள். தற்போது 3 நாள் விடுமுறையில் கரூர் வந்த முரளிதரன், ராம்குமார் மற்றும் 4 நண்பர்கள் சேர்ந்து கரூர் அருகேயுள்ள நெரூர் அக்ரஹாரம் பிரிவு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கச் சென்றனர்.
அப்போது, ஆழமான பகுதியில் முரளிதரன் குளித்தபோது நீரில் மூழ்கியுள்ளார்.
அவரைக் காப்பாற்றச் சென்ற ராம்குமாரும் நீரில் மூழ்கினார். இதனால், சக நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீருக்குள் மூழ்கிய இருவரையும் தேடி சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து அறிந்த வாங்கல் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.