கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள், வழக்குரைஞருக்கு ஜன. 3 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46). இவர்கள் கரூரில் வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவில் தங்கி அங்குள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சென்றுவந்தனர். இதனிடையே கரூரில் பதுங்கியிருந்த 2 பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கடந்தாண்டு கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக மதுரை மாவட்டம், ஆலங்குளம் அன்பு நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனையும் (35) கடந்த ஜன. 8-ல் க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்து கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இவ்வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் மூவருக்கும் வரும் ஜன. 3- வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.