கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு இந்திராநகர், காமதேனு நகர், ராமகிருஷ்ணபுரம், திண்ணப்பா கார்னர், ரத்தினம் சாலை பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அவர் கூறுகையில், இப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களிடம் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துகொள்ளவும், தரைமட்ட தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து மூடிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. காமதேனு நகர் பகுதியில் உள்ள ரெட்டை வாய்க்காலில் கழிவு நீர் தடையின்றி செல்லும் வகையில் சுத்தப்படுத்த நகராட்சிப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ப.அசேக்குமார், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள் உள்பட பலர் உடனிருந்தனர்.