கரூரில் அக்.4-இல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
கரூர் மாவட்டத்தில் வரும் அக்.4 ஆம் தேதி எம்ஜிஆர்நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம். மதுரை மாவட்டத்தைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் வரும் அக்.4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இவ்விழாவானது பண்பாடு, கலாசாரத்தை ஊட்டக்கூடியதாகவும், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும். மேலும், அனைத்து சத்துணவு மையங்களிலும் அன்றைய தினத்தில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விழாவில் ரத்த தானம், அன்னதானம், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.