சர்க்கரை நோயைத் தடுக்க, கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றார்
கரூர் அப்பல்லோ மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் செந்தில்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், ஹேண்ட் லூம் டெக்ஸ்டைல், சிட்டி மற்றும் பிளாட்டினம் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அவர் பங்கேற்று மேலும் பேசியது:
சர்க்கரை நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் 246 மில்லியன் பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக்கூடியது. ஆனால் இந்நோய்க்கு நிரந்தரத் தீர்வு கண்டறியப்படவில்லை. 10 விநாடிக்கு ஒரு சர்க்கரை நோயாளி நோயின் தீவிரத்தால் மரணமடைகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
சர்க்கரை நோய் வராமலிருக்க நாள்தோறும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். நோய் வந்த பின் முறையான உடற்பயிற்சி, நேரம் அறிந்து உணவு உண்ணும் பழக்கம், மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தி வைப்பதால் இந்நோய் அதிகம் தாக்கும் உடல் உறுப்புகளான சிறுநீரகம், இருதயம், மூளை பக்கவாதம் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.
முன்னதாக முகாமை கரூர் நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா துவக்கிப் வைத்து "சர்க்கரை வெல்வோம்' சிறப்பு நூலை வெளியிட மாவட்ட சிறப்பு திட்டத்தலைவர் க.பழனியப்பன் பெற்றுக்கொண்டார். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தலைவர் மேலை.பழநியப்பன் வரவேற்றார். சாசனத்தலைவர் எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மனோகரன், பிஎன்.அனந்தநாராயணன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடந்து முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.