கரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூர் தமிழ்நகர் மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு 13 நாட்களுக்கும் மேலானதாகக் கூறப்படுகிறது. எனவே இப்பகுதியினர் உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமம் ரயில்வே மேம்பாலம் கிழக்குப்பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி அலுவலர்கள் மற்றும் பசுபதிபாளையம் போலீஸார் உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.