வருவாய்த் துறை நேரடி நியமன (குரூப்-2) அலுவலர்கள் புதன்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டாட்சியர் சக ஊழியர்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், வட்டாட்சியர் அளித்த புகாரின்பேரில், வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர் சங்க உறுப்பினர் குணசேகரனை மாவட்ட ஆட்சியர் பணி விடுப்பு செய்ததைக் கண்டித்தும், தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ. செந்தில்குமார், மாநில அமைப்புச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனிடையே, வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்களை ஆட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்து புதன்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் பெ. செந்தில்குமார் கூறுகையில், எந்த தவறும் செய்யாத சங்க உறுப்பினர் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து புதன்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.