கரூர் மாவட்டம், வாங்கலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்துள்ள மேலசக்கரம்பாளையத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் வாங்கல்
குப்புச்சிபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் திங்கள்கிழமை காலை மேலசக்கரம்பாளையம் பேருந்துநிறுத்தம் முன்பு வாங்கல் - கரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாங்கல் போலீஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், உறுதியளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் வாங்கல் - கரூர் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.