கரூரில் சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கரூர் சின்னாண்டிபட்டையைச் சேர்ந்தவர் ராஜூ (52). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், சனிக்கிழமை இரவு கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து மணப்பாறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அங்கு பயணிகளை ஏற்றினார். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் வின்சென்ட், ராஜூவிடம் பேருந்தை உடனே எடுக்கக்கூறியதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஓட்டுநர் ராஜூவை தேவாசீர்வாதம் வின்சென்ட் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் சிறப்பு உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக இடமாற்றம் செய்துள்ளார்.