மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் அண்மையில் புதுதில்லியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் பி. ராகுல், அன்றாட வாழ்வில் வீடுகளில் பயன்படுத்தும் குழாய் நீரில் இருந்து வீட்டிற்குச் தேவையான மின்சாரம் மிக குறைந்த செலவில் தயாரித்தல் தொடர்பாக அறிவியல் மாதிரியை படைத்திருந்தார்.
இதையடுத்து அம்மாணவர் ஜப்பானில் மே 27-ஆம் தேதி நடைபெற உள்ள சர்வதேச இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில் உள்ள யொகாமா மற்றும் டோக்கியோ மாகாணங்களில் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஜப்பான் தேசிய அறிவியல் ஆய்வுக் கூடங்களில் நோபல் பரிசு பெற்ற மூத்த விஞ்ஞானிகள் அளிக்கும் சர்வதேச இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி முகாமில் இந்தியா சார்பில் அம்மாணவர் பங்கேற்கிறார்.
ஜப்பான் சர்வதேச இளம் விஞ்ஞானிகள் பயிற்சியில் இந்தியா சார்பில் பங்கேற்று கரூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பரணி பார்க் பள்ளி மாணவர் பி. ராகுலுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் எஸ். மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் முனைவர் சி. ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் ஏ. சுரேஷ், முதல்வர் கே. சேகர், துணை முதல்வர்கள் ஜி. நவீன்குமார், எம். முத்துக்குமரன், பி. சரஸ்வதி ஆகியோர் மாணவரைப் பாராட்டினர்.