கரூர் மாவட்டம், பெரியதாதம்பாளையம் ஏரியைத் தூர்வார நடவடிக்கை கோரி விரைவில் மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது என பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி முடிவு செய்துள்ளது.
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பிரிவின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
கரூர் பசுபதிபாளையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், கரூர் அமராவதி ஆற்றுக்கரையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது, கரூர் நகர் பகுதியில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அமராவதி, காவிரி ஆறுகள் மாசடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்டஇளைஞரணித் தலைவர் பிரபு தலைமை வகித்தார். பா.ஜ.க. இளைஞரணி மாநிலச் செயலர்கள் மகேஷ், கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பா.ஜ.க. மாவட்டத் தலைவர் முருகானந்தம், பொதுச் செயலர்கள் நகுலன், கைலாசம், கோட்ட அமைப்புச் செயலர் பெரியசாமி, இளைஞரணிப் பொதுச் செயலர் சிவம் சக்திவேல், கார்த்திக் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.