பாலவிடுதி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் வியாழக்கிழமை கரூர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலையத்துக்குட்பட்ட செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார் (25). கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொண்ணு (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லையாம். இதுதொடர்பாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போதும்பொண்ணு கடந்த 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போதும்பொண்ணுவின் தந்தை ராசு மற்றும் அவரது உறவினர்கள் சிவகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சிவகுமார் இல்லையாம், மேலும் போதும்பொண்ணுவின் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராசு பாலவிடுதி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிந்து போதும்பொண்ணுவின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் பழைய சேலம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகர காவல்நிலையத்தினர் மற்றும் கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறியதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.