கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் ராமாயணம் அஞ்சல் தலை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
கரூர் பரணி வித்யாலயா பள்ளியில், கரூர் மாவட்ட தலைமை அஞ்சலகம் சார்பில், ராமாயணம் குறித்த அஞ்சல் தலை வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.
இதில், கரூர் மாவட்ட தலைமை அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் தங்கராஜ் மற்றும் பரணிபார்க் கல்விக் குழுமச் செயலர் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோர் ராமாயணம் அஞ்சல்தலையை வெளியிட, அதை பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினரும், பரணிபார்க் கல்விக் குழும முதன்மை முதல்வருமான சொ. ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ். சுதாதேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில், பள்ளி முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன் பேசுகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இராமரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை பறைசாற்றும் வகையில், 11 அஞ்சல்தலைகளை அண்மையில் பிரதமர் நரேந்திரமோடி வாரணாசியில் உள்ள துள்சிமானஸ் கோயிலில் வெளியிட்டார். அதன் நினைவாகவும், தொடர்ச்சியாகவும் திருச்சி அஞ்சலக கோட்டம் சார்பில், கரூர் மாவட்டத்தில் இப்பள்ளியில் வெளியிடப்படுகிறது என்றார்.