கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என இந்து அறநிலையத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்:
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற பழமையான கோயில் ஆகும். இக் கோயிலுக்குச் செந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தற்போது 1 ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்டு, கோயில் வருமானத்தை அதிகரித்தால்தான் கோயிலில் கால பூஜைகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கமுடியும்.
எனவே கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடவேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு, கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து இந்து அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து, 2019, ஜன. 4ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.