கரூரில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வரும் 24 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து, கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஏ. ஆர். காளியப்பன், துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, கரூர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.திருவிகா, நகரச் செயலாளர் வை. நெடுஞ்செழியன், பேரவைச் செயலாளர் செ. காமராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கமலக்கண்ணன், பி. மார்கண்டேயன், கரூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் எம். செல்வராஜ், முன்னாள் மாணவரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நகர இளைஞரணி செயலாளர் சேரன் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அனைத்து இடங்களிலும் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.