காடுகளைப் பாதுகாப்போம் என கரூர் பரணிபார்க் பள்ளியின் 5000 சாரண, சாரணியர்கள் புதன்கிழமை உறுதியேற்றனர்.
அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், காடுசார் உயிரினங்களை பாதுகாக்கவும், அதுகுறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலக வனநாளை முன்னிட்டு காடுகள் தினம் கரூர் பரணிபார்க் சாரண மாவட்டம் சார்பில் புதன்கிழமை பரணிபார்க் பள்ளியில் நடைபெற்றது.
கல்விக்குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். கல்விக்குழும முதன்மை முதல்வரும், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினருமான சொ.ராமசுப்ரமணியன் பங்கேற்று பேசுகையில், "ஒரு காடு அழியும்போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை,அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், உயிர் ஆதாரமான நீர்,காற்று பறவைகள் , விலங்குகள், எண்ணற்ற நுண்ணுயிரிகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக அழிந்து வருகின்றன. எனவே வனங்களைப் பாதுகாத்தல் மனித வாழ்வுக்கு மிக அவசியம்' என்றார். பின்னர் காடுகள் தின உறுதிமொழியை வாசிக்க பள்ளியின் 5000 சாரண, சாரணியர்களும் சர்வதேச காடுகள் நாளில் இயற்கையை பாதுகாப்போம், வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், வனங்களை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் பரணி பார்க் கே. சேகர், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ். சுதாதேவி மற்றும் துணை முதல்வர் ஆர். பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.