புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நவ. 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் 2018-19 ஆம் ஆண்டின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்திற்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 8 ஒன்றியங்களில் மொத்தம் 1,600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏழைகளின் பங்கு அடையாள எண் வைத்திருக்க வேண்டும். சொந்த கிராமத்தில் நிலையாக வசித்து வருபவராக இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தின் கீழ் இலவச கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன் பெற்றவராக இருக்கக்கூடாது.
ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு விதிமுறைகளின்படி 30 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி., பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 4 வார வயதுள்ள ரூ.3,750 மதிப்புள்ள 50 அசல் நாட்டு ரக கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், இரவில் கோழிகளை அடைக்கும் வகையில் 30 சதுர அடி பரப்புள்ள கூண்டிற்கு ரூ.2500- மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.