நடிகர் எஸ்.வி. சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2- ல் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ஜன. 4-க்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ்.வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளரை விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தது தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் எஸ்.வி. சேகர் மீது 7 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க கடந்த ஜூலை 19-ல் 6 வாரத்துக்கு தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீண்டும் 6 வாரத்துக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கு ஜன. 4-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.