அரவக்குறிச்சி வட்டம் பரமத்தி ஒன்றியம் சாலிபாளையத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்தைப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் பரமத்தி ஒன்றியம் சாலிபாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடக்கி வைத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மேலும் கூறியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் 4 மாத காலமாக மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரையுடன் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கையை ஏற்று கரூரிலிருந்து வேப்பம்பாளையம், வீரணம்பாளையம், சடையம்பாளையம், புன்னம், நடுப்பாளையம், புன்னம்சத்திரம், பஞ்சயங்குட்டை, சாலிபாளையம், வேலாயுதம்பாளையம், மோளப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கரூர் நகரம், பள்ளிகளுக்கு வந்து செல்லும் வகையில் இப்பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அவசியம், அத்தியாவசியம் தேவைகளுக்காக
பேருந்து வசதி கோரும் கிராமங்களுக்கு படிப்படியாக புதிய வழித்தடங்களை அமைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், மண்டல மேலாளர் ஜுலியஸ்அற்புதராயன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, வட்டாட்சியர் பிரபு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் எஸ்.திருவிகா, ஏ.ஆர்.காளியப்பன், பி.மார்கண்டேயன், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.