கரூரில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ. பத்மஸ்ரீகாந்தன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் கா. கந்தசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், செயலர் சி. முருகேசன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பணியிட மாறுதல் முறையை செயல்படுத்த வேண்டும், இளநிலை உதவியாளர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்து தேர்வை நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும்போது கடையில் உள்ள சரக்குகளை கிடங்குக்கு கொண்டு சென்றால் அதற்கான வாகன செலவுத் தொகையை உடனே வழங்க வேண்டும், கடை ஆய்வு பணிகளில் கடை ஊழியர்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.