மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி மண்டல செயலாளர் ரங்கன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மின்வாரியத் துறை அமைச்சர் அறிவித்தவாறு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளப்படுத்த வேண்டும்.
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கரூர் மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.