மாணவிகள் கல்வி அறிவோடு, அனுபவ அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் திருச்சி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் எம். செந்தமிழ்ச்செல்வி.
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 64 மாணவிகள் உள்பட 988 மாணவிகளுக்கு பட்டம் அளித்த அவர் மேலும் பேசியது: வாழ்கையின் முக்கியத்துவத்தை மாணவிகள் அறிய வேண்டும். மாணவிகள் கல்வி அறிவோடு, அனுபவ அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பண்பாடு மற்றும் கலாசாரத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு இருக்க வேண்டும். மாணவிகள் காலத்தை விரயம் செய்யாமல் கடினமாக உழைத்தால், பல்வேறு துறைகளில் சாதனை புரியலாம் என்றார் செந்தமிழ்ச்செல்வி.
இந்த விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், கல்லூரி முதல்வர் (பொ) எஸ்.எச். அப்ரோஸ் உள்பட துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.