பெரம்பலூரில் அரிமா சங்கம் சார்பில் ஆக. 20 ஆம் தேதி கண் தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார் அரிமா சங்கத் தலைவர் ஜி.என்.பி. ஒஜீர்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
பெரம்பலூர் அரிமா சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூரில் ஆக. 20 ஆம் தேதி கண்தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி ஊக்கதொகை வழங்குதல் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நிகழாண்டு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிலரங்கம் நடத்தப்படும்.
ஏழை, எளிய 15 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது திருமணத்துக்குத் தேவையான அனைத்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நடுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், ரத்த தானம் முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படும். ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம் மற்றும் ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் ஒஜீர். பேட்டியின்போது, சங்க செயலர் ராஜா, பொருளாளர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் மணிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.