பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் இதயத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜியாவுதீன் அஹமது, ஷாஜகான், பிலால், அஹமது இக்பால்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயலர் அப்துல் சத்தார், மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராஹிம் உஸ்மானி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான
தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திமுக நகரச் செயலர் மா. பிரபாகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலர் இரா. கிட்டு, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், செய்தித் தொடர்பாளர்
எம். அகமது இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாருக் வரவேற்றார். மாவட்டச் செயலர் அப்துல் கனி அனீபா நன்றி கூறினார்.