பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தில் அளிக்கப்படவுள்ள இலவச தையல் கலைப் பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் ஜெ. அகல்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் டிச. 20 முதல் தையல் கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இப் பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயத்தொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறும் பயிற்சியில், அனைத்துவித தையல் கலைப் பயிற்சியும் சிறந்த முறையில் அளிக்கப்படும். காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியின்போது, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிச. 18-ல் நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் - 621212 என்ற முகவரியில் நேரில் அல்லது 04328 277896 என்னும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.