பணி நீக்கக் காலத்தை, பணிக் காலமாக அறிவிக்க வேண்டுமென, சாலைப்பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் பி. முத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் சி. சுப்ரமணியன், மாவட்ட இணை செயலர் கே. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலர் எஸ். மகேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
கூட்டத்தில், சாலைப்பணியாளர்கள் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வை பறிக்கும் வகையில் போடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யவேண்டும். 8- வது ஊதியக்குழு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட தர ஊதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இல்லம் எதிரே டிச. 20 ஆம் தேதி நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் பி. சுப்ரமணி நன்றி கூறினார்.