பெரம்பலூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜுலை 11 ஆம் தேதி உலக மக்கள்தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஜூலை மாதம் முழுவதும் குடும்ப நலத்துறை சார்பில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவுகளையும், அளவான குடும்பத்தின் நன்மைகளையும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவுகளை பொது மக்களிடையே விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தொடங்கிய பேரணியானது, சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக சென்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மக்கள்தொகை விழிப்புணர்வு குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
இதில், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல மாவட்ட இணை இயக்குநர் செல்வராஜன், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் மாவட்ட துணை இயக்குநர் எம். சசிகலா, சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குநர் சம்பத், முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி மற்றும் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ரோவர் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, ரோவர் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.