பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறை மூலம் மீட்க பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், ஒரே நேரத்தில் 10 நபர்களை மீட்கும் திறன்கொண்ட ரப்பர் படகு, மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை, இரும்புப் பொருள்களை வெட்ட ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் கருவி, தீ விபத்து ஏற்படும் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்காகவும், பொருள் சேதங்களை தவிர்ப்பதற்காகவும் அதிக தூரத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்க உதவும் கருவிகள் ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.